பிரபல TATA குழுமத்தின்துணை நிறுவனமான TCS நிறுவனத்தில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததோடு, 7 பேர் அடுத்தடுத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.  மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு, 55 நாடுகளில், உலக அளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகள், ஆலோசனை மற்றும் வணிகத் தீர்வுகள் வழங்கும் பிரபல TCS  நிறுவனத்தில் பகீர் பாலியல் குற்றச்சாட்டுகள், மதமாற்றக் குற்றச்சாட்டுகள், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, அடுத்தடுத்து கைதுகள் என பரபரப்பாகி வரும் பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...  சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள, TCS கிளையில் நடைபெற்றதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தொடர், புகார்களைப் புறக்கணித்ததாகவும், அவற்றை  TCS  நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பத் தவறியதாகவும், சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணையில் தெரியவந்துள்ளது.  பாலியல் வன்கொடுமை, திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி பழகுதல், மோசடி மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  யார் அந்த சூத்திரதாரி?  அதுவும், HR Manager  நிடா கான் என்பவரே, புகாரை மூடிமறைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் முயன்றதாகக் கூறப்படும் 'சூத்திரதாரி' யாக செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையே சுமார் 78 'சந்தேகத்திற்குரிய' செல்போன் அழைப்புப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் உரையாடல்களைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளன. அது தொடர்பான, பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். POSH குழுவில் உள்ளவருக்கே இப்படியொரு நிலைமையா? அதுவும், HR Manager  நிடா கான, பாதிக்கப்பட்ட பெண்களிடம், புகாரை வாபஸ் வாங்கும்படி மீண்டும் மீண்டும் கூறியதுடன், அலுவலகத்தில் உள்ள POSH எனப்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழுவில் பாதிக்கப்பட்ட பெண் உறுப்பினராக இருந்தபோதிலும், எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கத் தவறியுள்ளார் எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  கைதாவதற்கு சற்றுமுன்கூட தொடர்பு... இதற்கிடையில், TCS நாசிக் கிளையின் உதவிப் பொது மேலாளர் (AGM) ஒருவர், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும், மூன்றாவது அக்யூஸ்ட்டான டேனிஷ் ஷேக் என்பவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. டேனிஷ் ஷேக் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்புகூட அவருக்கு AGM அழைப்பு விடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஏதேனும் கூட்டுச்சதி நடந்ததா? TCS நாசிக் கிளையில் பெண் ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அழைப்பு மற்றும் மின்னஞ்சல் பதிவுகளை ஆய்வு செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையே ஏதேனும் "கூட்டுச் சதி" இருந்ததா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் ஒரு வழக்கு தியோலாலி முகாம் காவல் நிலையத்திலும், மற்ற 8 வழக்குகள் மும்பை நாக்கா காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகியவை தொடர்பாக, ஒரு ஆண் உட்பட மொத்தம் 9 பேர் முன்வந்து புகார்களை அளித்துள்ளனர். ஆபரேஷன் மேனேஜருக்கே  ‘ஆப்பு’ரேஷன்... மேலும், TCS நாசிக் கிளையின் Operations Manager -ஐ போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஏப்ரல் 13 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான டேனிஷ் ஷேக் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களான ஆசிப் அன்சாரி, ஷாஃபி ஷேக், ரஸா மெமன், தௌசிஃப் அத்தார் மற்றும் ஷாருக் குரேஷி ஆகியோர் தற்போது நாசிக் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில், டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், இத்தகைய குற்றச்சாட்டுகளை "மிகவும் கவலைக்குரியவை" என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக ஒரு உள்விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.  மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் 40-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரைப் பிடிப்பதற்காக, பெண் காவலர்களின் உதவியுடன் ஒரு undercover operation-ம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  லீக் ஆன அந்த FIR -ல் என்ன உள்ளது?  புகார் கொடுத்த பெண்களில் ஒருவரின் எஃப்.ஐ. ஆர் தகவலின்படி, இந்தச் சம்பவங்கள் 2022 மற்றும் 2026-ஆம் ஆண்டு  இடைப்பட்ட காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. புகார் அளித்த பெண், 2023-ஆம் ஆண்டு முதல் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணும் அந்த பெண்ணால் பாலியல் புகாருக்குள்ளாவனரும் ஒரே கல்லூரியில் படித்த நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், அந்தப் பெண்ணிற்குத் தனது நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பிறகு, கல்லூரி முடிந்ததும் அந்தப் பெண்ணை அடிக்கடி சந்திப்பிற்கு அவர் அழைத்துள்ளார். படிப்பு முடிந்த பிறகு, அதே நிறுவனத்தில் நேர்காணலில் பங்கேற்கச் சொன்னதன் அடிப்படையில், அந்தப் பெண் அங்கு உதவியாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   சுற்றுலா விடுதியில் நடந்தது என்ன?  குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணை 2024 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சுற்றுலா விடுதிக்கு அழைத்துச் சென்று அவரை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது அந்த பெண்ணிற்கு தெரியவந்துள்ளது.  "இந்தநிலையில், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அந்த ஆணின்நண்பர் ஒருவர், அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவர்களது உறவு குறித்துப் பெண்ணின் குடும்பத்தாரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி, தன்னுடனும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்" என்றும் புகார் எழுந்துள்ளது. "அந்த இரண்டு நண்பர்களும் அந்தப் பெண்ணை தங்கள் மதத்திற்கு மாறுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர்." எனவும் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்ட பின்னரே இறுதி முடிவுகள் எட்டப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். NIA மற்றும் Anti-Terrorism Squad விசாரணை?  பாலியல் துன்புறுத்தலோடு, மதமாற்ற குற்றச்சாட்டும் எழுந்ததால், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ , பயங்கரவாத எதிர்ப்புப் படையான Anti-Terrorism Squad ((ATS)) மற்றும் மாநில உளவுப் பிரிவுகளுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   மேலும், தீவிரவாதத் தொடர்புகள் அல்லது வெளிநாட்டு நிதியுதவி இருக்கலாம் என சமூக ஊடகங்களில் பரவி வரும் யூகங்களுக்கு, போலீஸார் பதிலளித்து வருவதாகவும் காவல்துறை ஆணையர் சந்தீப் கர்னிக் தெரிவித்துள்ளார். அனைத்துக் கோணங்களிலும் ஆராயப்பட்டு வந்தாலும், அத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.  கீழ்நிலை பெண் ஊழியர்களுக்கு டார்கெட்... இதுவரை ஆறு ஊழியர்களும் ஒரு உதவிப் பொது மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு பெண் தலைமறைவாக உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் டி.சி.எஸ்ஸில் உயர் பதவிகளை வகித்ததாகவும், தங்களது பதவிகளைப் பயன்படுத்தி கீழ்நிலை சக ஊழியர்களை பாலியல் ரீதியாக குறிவைத்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. டி.சி.எஸ். ஊழியர்களிடம் பேசுவதற்கும், அச்சமின்றி சம்பவங்களைப் புகாரளிக்க அவர்களை ஊக்குவிப்பதற்கும், பெண் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட டீமை  பணியிடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.    ]]>

Bills & Payments · SPONSORED

Pay Any Bill Instantly

Electricity, water, gas and more — one app, zero hassle.

Visit AllBills.in